டுபாய் பிரஜைகளைக் கொன்றது நுளம்பு மருந்து??
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரஜைகளான ஓர் இளம் தாயும் குழந்தையும் உணவு நஞ்சானதன் காரணமாக இறந்ததாக முதலில் நம்பப்பட்டதாகவும் தற்போது இந்த மரணங்கள் ஹோட்டல் அறையில் பயன்படுத்திய நுளம்பு மருந்து ஆவியினால் உண்டான ஒவ்வாமை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
டுபாயிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை வந்த பின் இவர்கள் உணவு எதையும் சாப்பிடவில்லை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்கள் சீதுவையிலுள்ள ரமடா ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
வத்தளை நீதவான் கட்டளைக்கு அமைய மரணமான இருவரினதும் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள் இரண்டு சடலங்களையும் டுபாய்க்கு கொண்டு செல்ல அனுமதி கோரியுள்ளனர்.
பூரண விசாரணை மேற்கொள்ள மரண விசாரணை அதிகாரியினால் நடத்தப்பட்ட விசாரணை மட்டுமே போதாது என பொலிஸ் கூறியுள்ளது. முதலில் உணவு நஞ்சானதால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இரசாயன ஆவி தான் இந்த மரணங்களுக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இறந்த பெண்ணின் கணவன் முகமட் அலி ஒபய்ட் அல் மஸ்றெளவி தற்போது சுகமடைந்துள்ளார்.
ஆனால் பொலிஸார் இன்னும் இவரிடம் வாக்குமூலம் பெறவில்லை. இவரின் மனைவியான 21 வயதுள்ள ஒபரா அலியும் ஒன்டரை வயதுள்ள மகனும் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்தனர்.
இலங்கையிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் விசாரணைகளை அவதானித்து வருகின்றது. இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக