தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு நம்பிக்கையூட்டும் வரவு. சுப்பிரமணியன் இளம் இயக்குநர். ராதாமோகனிடம் பணியாற்றியவர். 'அபியும் நானும்' படத்திற்கு வசனம் எழுதிய இரட்டையர்களில் ஒருவர்..! ராதா மோகன் டீம் என்பதால் வசனத்திற்கும், காட்சிப்படுத்தலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார்..!
படத்தின் மிகப் பெரும் பலமே கன்னியாகுமரி வட்டார தமிழ்தான்..!
படத்தில் நடித்திருக்கும் அத்தனை கேரக்டர்களிடமிருந்தும் விதம், விதமான அப்பகுதி தமிழ் வார்த்தைகளை கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது..! நன்றிகள் இயக்குநருக்கு..! 2010 சூரசம்ஹாரத்தில் துவங்கி, 2011 சூரசம்ஹாரத்தில் முடிவடைவதாக காட்டப்பட்டிருந்தாலும் உண்மையில் இதற்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!
திருச்செந்தூர் அருகேயுள்ள ஒரு மீனவ கிராமம். ஹீரோ அருண் பாலாஜி வீட்டில் வெட்டி ஆபீஸர். பார்த்தவுடன் காதல் என்பதுபோல் பாமாவை பார்த்ததும் பித்துப் பிடித்து அலைகிறார். இன்னொரு பக்கம் பவன், மீன் ஏற்றிச் செல்லும் மினி லாரியின் டிரைவர். அதே லாரிக்கு ஓனராக வேண்டும் என்கிற ஆசையை மனம் முழுக்க வைத்திருப்பவன்.
பவனின் தங்கையை தனக்கு இரண்டாம்தாரமாக மணமுடித்துக் கொடுத்தால், அந்த மினி லாரியை பவனுக்கே தாரை வார்ப்பதாகக் கூறுகிறார் வண்டி ஓனர். தனது நீண்ட நாள் லட்சியம் நிறைவேறப் போகிறதே என்பதற்காக ஓனரின் 45 வயதைக் கூட யோசிக்காமல் கல்லூரியில் படிக்கும் தங்கையை திருமணம் செய்து கொடுக்க தயாராகிறார் பவன். ஏற்கெனவே காதலில் வீழ்ந்துகிடக்கும் தங்கை தனது காதலருடன் கம்பி நீட்டுகிறாள். அவள் சென்றதை அருண் பார்க்கவில்லை என்றாலும், காதலனை தற்செயலாக பார்த்துவிடுகிறான். அவர்கள் இருவரையும் பவன் ஓட்டும் மினி லாரியின் கிளீனர் கிளி பார்த்துவிடுகிறான்.
இதனை பவனிடம் பற்ற வைக்க.. அருணிடம் தனது தங்கையைக் கேட்டு தகராறு செய்கிறான் பவன். அருணின் மாமா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் என்பதால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் டூவீலரில் வந்து கொண்டிருக்கும் அருணின் மீது விபத்து போல் மோத, அந்த விபத்தில் அருணின் அம்மா சாகிறாள். இதற்குப் பின்னும் ஆத்திரம் அடங்காத பவன் இதனை அருணிடமே சொல்லித் தொலைக்க.. பதிலுக்கு அருண் அவரை மேலும் அவமானப்படுத்திவிட.. பழிக்குப் பழி ஆட்டம் துவங்குகிறது. இறுதியில் யார் வென்றது என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
படத்தின் துவக்கத்தில் மெதுவாக நகரும் கதை, அருண் பாலாஜி-பவன் மோதலுக்குப் பின்தான் சூடு பிடிக்கிறது. நடிகர்களின் மிக எதார்த்தமான நடிப்பினால் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஏதோ சிபிமலையலின் படத்தை பார்க்கும் உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை..!
குடித்துவிட்டு வரும் மகனிடம் அம்மாவும், தங்கையும் பேசும் பேச்சும், அவனது காதலிக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவர்கள் காட்டும் ரியாக்ஷனும் எதிர்பார்க்காதது. அருணின் அப்பாவாக வரும் மகாதேவனின் அலட்டலில்லாத நடிப்பும்கூட கவர்கிறது..! மருமகள் தன்னிடம் பேச மறுப்பதாக மருமகனிடம் சொல்லும் அந்தக் காட்சியில் இருக்கும் நெகிழ்வு மனதையும் தொடுகிறது.. அருண் பாலாஜியின் மேக்கப் கொஞ்சம் பிசிறு தட்டினாலும், போகப் போக கதைக்குள் ஆழ்ந்துவிட்டதால் அருணின் நடிப்பை மீறி வேறு எதிலும் கவனம் செல்லவில்லை.. தப்பித்தார் அருண்..! இன்னும் கொஞ்சம் ஷேப் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர்..! வளரட்டும்..!
இன்னொரு பக்கம் முரடனாக அசத்தியிருக்கிறார் பவன். முதல் காட்சியிலேயே நான் லாரி டிரைவர். ஓட்டுறதுதான் என் வேலை.. பெட்டியைத் தூக்கி வைக்குறது இல்லை என்று சொல்வதிலேயே இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்..! எதைப் பற்றியும் கவலையில்லாமல் தான் ஒரு லாரிக்கு ஓனராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்பதால் அதனை நோக்கிய அவரது வெறியும், தங்கை ஓடிப் போய் அவமானத்தில் குன்றி, பின்பு அதனினும் பெரிய அவமானத்தைத் தாங்கிக் கொண்டு புலம்பும் வேடத்தைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார்.
கொலை செய்ய ஆட்களைத் தேடியலையும் காட்சியும், எப்படித்தான் ஆள் சிக்குகிறார்கள் என்பதையும் மிக எதார்த்தமாக நிரூபித்திருக்கிறார் இயக்குநர். அவனைக் கொன்னாத்தான் நான் நிம்மதியா தூங்க முடியும் என்று பவன் சொல்லும் வசனம்தான் இந்தப் படத்தின் ஆணி வேர்..
படத்தில் இவர்களைத் தவிர மிக முக்கிய இன்னுமொரு கேரக்டர் கிளி என்ற வேடத்தில் நடித்திருக்கும் சேகர். மௌனத்தைவிட மிகச் சிறந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை என்பார்கள். இதில் இவர் பேசியிருக்கும் வசனங்கள் 7 அல்லது 8-தான் இருக்கும். மீதமெல்லாம் மௌனமான பார்வைதான். மிரட்டியிருக்கிறார். ஆரண்ய காண்டத்தின் கிளியை அடுத்து இந்தக் கிளியும் நிச்சயம் பேசப்படுவார் என்று உறுதியுடன் நம்புகிறேன்..!
ஒரு வரி வசனத்தில் கதையை நகர்த்தும் யதார்த்த சூழலை கையாண்டிருக்கிறார் இயக்குநர். பிற்பாதியில் அவைகள்தான் படத்திற்கு மிகவும் அழுத்தம் கொடுத்திருக்கின்றன. விசுவாசம்.. என்ற சப்இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு, 'ஏன் எங்களுக்கு இருக்கக் கூடாதா..?' என்று கிளி கேட்கும் வசனத்தில் இருக்கும் வலி நிச்சயம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்..!
பாமா என்றொரு கேரளத்து நங்கைதான் நாயகி. அவ்வளவு அழகில்லை என்றாலும் கேமிராவுக்கு ஏற்ற முகம். காதல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் சில பல முகச் சிதறல்கள் முத்துக்கள்..! மகாதேவன் தன் வீட்டில் பாமாவை பார்த்தவுடன் கோபத்தில் கத்தும் வார்த்தைகளுக்கு பாமா கொடுக்கும் நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை.. பொண்ணு அசத்துது நடிப்புல..!
பவனின் தங்கையாக வருபவரை ஏதோ ஒரு படத்தில் இதற்கு முன்பே பார்த்திருக்கிறேன். இவரே கதாநாயகியைப் போன்றுதான் இருக்கிறார். இன்னும் கொஞ்சம் பயன்படுத்திருக்கலாம்போல் தோன்றுகிறது..! இப்படித்தான் சில நட்சத்திரங்கள் திரைமறைவில் காணாமலேயே போய் விடுகிறார்கள்.!
இசை சத்யா. 'எங்கேயும் எப்போதும்' படத்தில் அசத்தியவர்.. இந்தப் படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் அவர் கொடுத்த பாடலுக்கு ஏற்றவாறு டியூன்களை போட்டிருக்கிறார்.. 'கம்பி மத்தாப்பூ' பாடல் அநேகமாக அத்தனை ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும். அனைத்து பாடல்களிலும் வரிகள் தாராளமாக இட நெருக்கடியில்லாமல் பாடப்படுகிறது..! சந்தங்கள் சப்தங்களைத் தாண்டியும் ஒலிக்கிறது..! பின்னணி இசையைத் தனியே ஒரு தொகுப்பாகவே போடலாம்தான்..! லாரி, கார் சேஸிங் காட்சியில் தனித்த அடையாளமாய் தெரிகிறார் இசையமைப்பாளர்..! கொஞ்சம் கிராபிக்ஸ் என்றாலும் அந்த காற்றாலை வடிவமைப்பு தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்..!
இவர்கள் தவிர தாய் ஸ்ரீரஞ்சனி, நாயகியின் தந்தையாக தவசி, தாயாக பேபி, நாயகரின் போலீஸ் அத்தானாக தயாள், இரண்டாம் கல்யாணத்திற்கு ஆசைப்படும் காளியின் முதலாளியாக வரும் சூசை, பவனின் மினிலாரி கிளினராக சாய் ஜெகன், பவனின் தங்கையாக வரும் ஜானகி என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது சேவற்கொடிக்கு மேலும் மகுடம் சேர்க்கிறது.
படத்தில் பெரும் குறை சேவற்கொடி என்று தலைப்பு வைத்ததற்காக திருச்செந்தூர் திருவிழாவை கதையில் பயன்படுத்த நினைத்தது. இதற்காக மட்டும் இந்த தரமான படத்தை ஒட்டுமொத்தமாக புறகணிப்பது சரியல்ல!
சேவற்கொடியின் மிகச்சிறப்பான அம்சங்களில் செல்லதுரையின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது.
சேவற்கொடியின் முதலிலும், முடிவிலும் வரும் சூரசம்ஹார காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை பாத்திராதது! இதுமாதிரி ஆன்மீக களத்தில் ஆக்ஷன், காமெடி, லவ், சென்டிமெண்ட், சேஸிங் உள்ளிட்டவைகளை கலந்து, வினை விதைத்தவன் வினை அறுப்பான்! எனும் மெஸேஜையும் அழகாக சொல்லியிருக்கும் இயக்குநர் இரா.சுப்ரமணியன், மகா துணிச்சல்காரர் தான்! அவரது துணிச்சலுக்கு தாரளமாக ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!
சேவற்கொடி - பறக்கும்!
நடிகர்கள்
அருண் பாலாஜி, பாமா, மகாதேவன், பவன், சாய் ஜெகன், ஸ்ரீரஞ்சனி,
இசை
சி. சத்யா
இயக்கம்
இரா.சுப்ரமணியன்
தயாரிப்பு
மகரந்த் கமலாகர்
"தீபன் பக்கங்கள்"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


0 comments:
கருத்துரையிடுக