அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் நல்லுறவுடன் இருக்க இந்தியா விரும்புகிறது, என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் கொரியாவுக்குப் பயணமாகியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதுதான் இந்தியாவின் நோக்கம்," என்றார்.
அவரிடம், ஒருவேளை சீனாவா அமெரிக்காவா என்ற கேள்வி எழுந்தால் இந்தியாவின் நிலை என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு, "சீனா எங்கள் பக்கத்து நாடு. இருநாட்டுக்கும் இடையே பெரிய எல்லை உள்ளது. வர்த்தகத்தில் இந்தியாவின் பெரிய பார்ட்னர்.
அமெரிக்காவுடன் 2005- சிவில் அணு ஒப்பந்தத்துக்குப் பின் மிக இணக்கமான உறவு நிலவுகிறது. 3 மில்லியன் இந்தியர்கள் அங்கே வசிக்கிறார்கள். இந்தியாவின் பெரிய வர்த்தக கூட்டாளியும் கூட. எனவே இரு நாட்டு நட்பும் எங்களுக்கு தேவை. அந்த நட்புறவைப் பாதுகாக்கவே விரும்புகிறோம்," என்றார்.
இந்தியாவின் ஊழலும், சிவப்பு நாடா (அதிகாரிகள் ராஜ்ஜியம்) முறையும் அந்நிய முதலீட்டுக்கு பெரும் எதிரியாக உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருப்பது குறித்து மன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "இது தவறு. இப்படியொரு கருத்தை சில சக்திகள் பரப்பி வருகின்றன. இந்தியா அந்நிய முதலீட்டுக்கு பெரும் இடம் கொடுத்துள்ளது. முன்பிருந்ததை விட ஏராளமான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இந்தியா சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு. மக்களாட்சி முறையில் நிர்வாகம் நடக்கிறது. எனவே நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்க முடியும்," என்றார்.
வரும் ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு செலவழிக்கப்பட உள்ளதாகவும், தென் கொரிய நிறுவனங்களுக்கும் இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக