"தீபன் பக்கங்கள்"

வன்னியரசு கைதுக்கு வைகோ கண்டனம்



Vaiko Condemns Vanni Arasu arrest - Tamilnadu News Headlines in Tamil
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் அறவழியில் காந்திய வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இடிந்தகரையில் உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பாளையில் நேற்று மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற போராட்டம் வன்முறைக்கு துளியும் இடமின்றி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்ட பின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து நள்ளிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு நேற்று நள்ளிரவு ராஜபாளையம் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதும் பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதமாக இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று வந்த விமலன் மீது அப்பட்டமான பொய் வழக்கு போட்டு கைது செய்து தமிழக காவல்துறை சிறையில் அடைத்துள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினரை கொச்சைப்படுத்தியும், களங்கம் கற்பித்தும், கிறிஸ்தவ மிஷனரிகள் மீது பழி சுமத்தியும் மத்திய மந்திரிகள் நச்சுப்பிரசாரம் செய்து வந்தனர். போராட்டகாரர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், மக்களின் அச்சம் நீங்கும் வரையில் அணுஉலை தொடங்க தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறிவந்த முதல் - அமைச்சர் அதிரடியாக அணு உலைக்கு ஆதரவு தந்ததோடு போராட்டகாரர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

அணு உலைக்கு எதிராக நடைபெற்று வருகின்ற அறவழி போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கும், பொதுமக்கள் மத்தியில் இப்போராட்டம் குறித்து மிக தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய அராஜகபோக்கு எதேச்சதிகார நடவடிக்கையின் விளைவாகும். இந்த கைது நடவடிக்கைகளுக்கு பலத்த கண்டனத்தை தெரிவிப்பதோடு கைதானவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

Loading