அமெரிக்க பிரபல பாப் இசை பாடகி விட்னி ஹூஸ்டன் மாரடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை நிபுணர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது சாவு குறித்த சந்தேகத்துக்கு தீர்வு கிடைத்து விட்டது.
அமெரிக்காவை சேர்ந்த விட்னி ஹூஸ்டன் (வயது 48) பிரபல பாப் இசை பாடகியாக விளங்கினார். இசை உலகில் கொடிக்கட்டி பறந்த அவர் கிராமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றவர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் குளியல் அறை தொட்டியில் நிர்வாண நிலையில் கிடந்ததாக கூறப்பட்டது. இவர் ஏற்கனவே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அவருடைய மரணம் இயற்கையானதா? அல்லது வேறு காரணம் இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் பிவெர்லி ஹில் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தினர்.
இவரது சாவுக்கு காரணம் என்ன? என்ற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிவந்து இருக்கிறது. பிரேத பரிசோதனை நடத்திய நிபுணர்களில் ஒருவரான எட் வின்டெர் இதுபற்றி கூறியிருப்பதாவது:-
பாடகி விட்னி ஹூஸ்டனின் சாவு எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சம்பவம் ஆகும். மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மயக்கம் அடைந்து அவர் குளியல் தொட்டி தண்ணீரில் விழுந்ததால் மரணம் அடைந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடகி விட்னி பல்வேறு வகையான போதை தரும் மருந்துகளை உபயோகித்து இருப்பதற்கான தடயங்கள் இந்த பிரேத பரிசோதனையில் தெரிய வந்தன. ஆனால் அவை மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கேடு விளைவிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எந்த அளவிற்கு அவை உடலில் இடம் பெற்றிருந்தது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
பாடகி விட்னியின் சாவு விஷயத்தில் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் நிபுணர் எட் வின்டெர் கூறி விட்டார். எனவே மர்ம சாவு குறித்த வழக்கை பிவெர்லி ஹில் போலீசார் கைவிடுவார்கள் என தெரிகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்த பிறகு 2 வாரத்தில் இதுபற்றி முடிவு செய்வோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:
கருத்துரையிடுக