கூடங்குளத்தில் 3ம் நாளாகாவும் உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினருடன் அப்பகுதி மக்கள்
பத்தாயிரம் பேர் இனைந்திருப்பதாகத் தெரிய வருகிறது. கூடங்குளத்திற்குச் செல்லும் பாதைகள் மறிக்கபட்டிருப்பதால், கடல் மார்க்கமாக அங்கு மக்கள் குவிந்து வருவதாகத் தெரியவருகிறது.
இதேவேளை அங்கு குடும்பங்களுடன் போராட்டத்தில் இனைந்திருக்கும் சிறுவர்களுக்கான உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தண்ணீர் விநியோகம், மின்சார விநியோகம் தடுக்கப்பட்டிருப்பதனால், குடிதண்ணீர் பிரச்சனை அதிகரித்திருப்பதாகவும், அதேபோல் கழிப்பிட வசதியும் போதாத நிலையில் உள்ளதாகவும், இதனால் சூகாதரப் பற்றாக் குறை காரணமாக நோய் தொற்றுக்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், மருத்துவமனைகள் உள்ள போதும், போதிய மருந்துகள் இல்லாதிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு மோசமான நிலை உருவாகி வருவதாகவும், அதனால் அப்பகுதியில் நிறைந்திருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என அச்சம் தோன்றியுள்ளதாகவும் அறிய வருகிறது.
இதேவேளை அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் என்ன நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை தோன்றியுள்ளதாகவும், போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தமிழக அரசு காவல்துறை நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம் எனவும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இது இவ்வாறிருக்க, உதயகுமார் மற்றும் அவரது மனைவி மீரா இனைந்து நாகர்கோவிலை அடுத்த பழவிளை பகுதியில் சாக்கர் என்ற பெயரில் நடத்தி வரும் மெட்ரிகுலேசன் பள்ளியின் சுவர்களை இடிக்கப்பட்டும், பொருட்கள் சூறையாடப்பட்டும் உள்ளதாகத் தெரியவருகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னரும் இப் பாசாலை மீது சிறு அளவில் தாக்குதல்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு சென்ற ஊழியர்கள், பள்ளியின் முன்பக்க சுவர் முற்றிலும் இடிக்கப்பட்டும், பள்ளியினுள் இருந்த நூலகம், எல்.கே.ஜி. வகுப்பறைகள் ஆகியவையும் சூறையாடப்பட்டு இருந்தையும் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், இது தொடர்பில் உதயகுமாரின் மனைவி மீரா, ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்தத் தெரிவித்த மீரா; இப்பகுதி மாணவ மாணவிகளின் நலனுக்காக நாங்கள் இப்பள்ளியினை நடத்தி வருகிறோம். தற்போது இந்த பள்ளிமீது மர்மநபர்களால் விஷமத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன், ஒரு அநாமதேயக் கடிதம் வந்ததாகவும், அதில் இங்கிருக்கும் பள்ளியை மூடி விட்டு ஜெர்மனிக்கு சென்று பள்ளி நடத்தும்படியும், அடுத்த கல்வி ஆண்டில் இப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேர மாட்டார்கள் எனவும், மீறி வகுப்புகளை நடத்தினால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் மிரட்டப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எனது கணவர் உதயகுமார், கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதும், அவர் யாரையும் புண்படுத்தியது இல்லை. வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால் அரசும், போலீசாரும் எங்களுக்கு பாதுகாப்பு தராததால் எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது. இது தொடர்பில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கூடங்குளம் போராட்டத்தில் ஆர்வம் காட்டிய பல்வேறு தமிழக அரசியற் கட்சிகளும் தற்போது மிக இறுக்கமான இந்தந் சூழ்நிலையில், அமைதி காத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்தி தொடர்பில் நீங்கள் நினைப்பது என்ன?
நாகரீகமான வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களைத் கீழேயுள்ள பாக்ஸில் தெரிவியுங்கள். அவற்றிக்கு கருத்தாளர்களே உரித்துடையவர்கள். அனுமதித்த பின்னரே வெளியாகும்.கருத்துக்கள் தெரிவிப்பதற்கான முறை மற்றும் தமிழில் எழுத, உதவிக்கு அழுத்துக!..

0 comments:
கருத்துரையிடுக