வடகொரியா, ஈரான் நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பு விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபரிடம் ஒபாமா வலியுறுத்தினார்.
தென்கொரியாவில் உள்ள சியோலில் அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க 50 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குவிந்துள்ளார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜின்டாவோ ஆகியோர் சியோல் சென்று இருக்கிறார்கள். இந்த இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈடுபடும் விவகாரம் குறித்து விரிவாக பேசியதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது வடகொரியா, ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா ஆகியவை பொதுவான அக்கறை கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபரிடம் ஒபாமா வலியுறுத்தினார். இதே போல தென்கொரியா ஜனாதிபதி லீ மியாங் பாக்கும், சீன அதிபரை சந்தித்து, வடகொரியா ராக்கெட்டு ஏவும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
வடகொரியா, சீனாவின் நட்பு நாடாகும். எனவே ஒபாமா நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'வடகொரியா விவகாரத்தில் சீனா கண்ணை மூடிக் கொண்டு இருக்க கூடாது. பொருளாதார உதவிகளை குறைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில் கொரியா பகுதியில் நிலவும் பதட்டம் தொடர்பாக சீன அதிபர் ஹூ ஜின்டாவோ கருத்து தெரிவிக்கையில், இங்குள்ள சூழ்நிலை மிகவும் னட்பமான, சிக்கல் கொண்டதாக இருக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காண முடியாவிட்டாலும், அனைத்து தலைவர்களும் பேசி மேலும் அதிகரிப்பதை தவிர்க்கலாம்' என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக சியோலில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் ஒபாமா கலந்து கொண்டார். அங்கு பேசுகையில் அவர் வடகொரியா, ஈரான் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால் அவை மற்ற உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்படும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக ரஷ்ய பிரதமர் புதினை வருகிற மே மாதம் சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாக ஒபாமா தெரிவித்தார்.
இதற்கிடையில் ஈரானில் உள்ள தாஜிஸ்தான் நகரில் 'ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் ஜனாதிபதி முகமத் அகாமதின் நிஜாத் கலந்து கொண்டு பேசுகையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். 'அமெரிக்காவும், நேட்டோவும் தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களின் ஆதிக்க சர்வாதிகாரப் போக்கு இனி நீடிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

0 comments:
கருத்துரையிடுக